Thursday, March 15, 2012

விமர்சனம் ’கழுகு’- இந்த டைரக்டர்கிட்ட பாத்து பழகு

நேற்று ஃபோர் ப்ரேம்ஸ் தியேட்டரில் இந்தப்படத்தைப்போட்டார்கள்.மவுனம் ரவிதான் படத்தின் பி.ஆர்.ஓ. அவர் பெயருக்கு ஏற்றாற்போல் மவுனமாக இருக்க, தலைவர் விஜயமுரளிதான் படம் துவங்குவதற்கு முன்பு, இயக்குனருக்கு, ஹீரோவுக்கு, தயாரிப்பாளருக்கு சால்வை அணிவித்தார்.

இப்படி முதல் பட டைரக்டருக்கு மாலை மரியாதை செய்வது இனி தொடர்ந்து நடக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் பத்திரிகையாளர் முன்னிலையில் முதிர்ச்சியின்றி அறிவித்தார்.
படம் பாத்த பிறகு அது நல்லா இருந்தா, மாலைமரியாதை மட்டுமில்லாம, கற்பூரம் கொளுத்தி கூட ஆரத்தி எடுக்கலாம்.நூத்துக்கு தொண்ணுத்தி எட்டு அறிமுக டைரக்டருங்க, மொக்கையா படம் எடுத்து, புரடியூசர்களுக்கும்,தமிழ்சினிமாவுக்கும் மாலையை சாத்திட்டுப் போறப்ப, அவங்களுக்கு ஏன் நாம மாலை போடனும்ங்கிற கேள்வியை, துணிவாகவும் அதே சமயம் கொஞ்சம்   பணிவாகவும் கேட்டுக்கொண்டு, பிரஸ் ஷோவுக்கு இன்றைய டிபனாகக்கொடுத்த வடையுடன் விடை பெறுகிறேன்.

இப்ப நாம ‘கழுகு’ விமர்சனத்துல குதிக்கலாம்.

பத்திரிகை செய்திகளில் இந்தப்படத்தின் ஒன்லைன் பற்றிப் படித்த போதே, என் குலதெய்வம் அக்கம்மா அழகம்மா மீது சத்தியமாக, படத்தின் மொத்தக்கதை என்னவாக இருக்கும் என்று ஒரு நிமிடத்தில் யூகித்துவிட்டேன்.

பொதுவாக சினிமா ஏரியாக்களில் கதை எழுதுகிறவர்களை விட கதை ‘செய்கிறவர்களே’ அதிகம்.
கதை செய்வது எப்போதுமே மிக சாதாரணமான வேலை. ஆனால் அதற்கு பலபேர், ஒரு பிரபல பத்திரிகையின் இணையாசிரியர் டாய்லெட்டில் முரசொலியை வைத்துக்கொண்டு முக்குவதைப்போல்,  முக்குவதைப்ப்பார்த்திருக்கிறே
ன்.
தறுதலையாகத்திரிந்த ஒருவன் தொபேல் என  தபால் தலையில் இடம் பிடிக்கிறான்’

ஒரு பண்ணையார் வீடு, முன் வீட்டுல கல்யாணம், கொல்லைப்புறத்துல கருமாதி .என்ன நடந்துச்சி?
பொணங்கள சந்தோஷமா அடக்கம் பண்ணிக்கிட்டிருந்த வெட்டியான், முதமுதல்ல தன் குழந்தை செத்தப்ப அழுதான்.

தற்கொலைப்பாறையிலருந்து குதிச்சி சாவுறவங்க பாடிகளை மீட்டுத்தர்ற ஒருத்தன், அதே பாறையிலருந்து குதிச்சி தற்கொலை பண்ணிக்கிறான்.
 இதில் கடைசியாக நான் எழுதிய ஒன்லைன் தான் ‘கழுகு’ படத்தின் கதை.

ஒரு பத்து நிமிடம் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி நீங்கள் யோசித்தாலும் உதித்து விடுகிற ஒரு சாதாரண கதைதான்.

கதாநாயகன் கிருஷ்ணாவும் அவனது நண்பர்கள் கருணாஸ், தம்பி ராமையா, மற்றும் பேச முடியாத அதனால் நமக்குப் பெயர் தெரியாமல் போனவருமாகச் சேர்ந்து, கொடைக்கானல் தற்கொலைப்பாறையிலிருந்து குதிப்பவர்களின்  பாடிகளைத் தேடி எடுத்து வரும் காசில், பீடி’குடித்து ‘ வாழ்கிறார்கள்.

இந்த வரிசையில் கதாநாயகி பிந்து மாதவியின் தங்கை தன் காதலனுடன் குதித்து விட , அவரது பாடியை மீட்டுத்தரும் கிருஷ்ணாவிடம் தனது உயிரோடு உள்ள பாடியை காதல் என்ற பெயரில் ஒப்படைக்கிறார்  பிந்து.

ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுத்து,’’இங்க பாரு பொண்ணு பாக்க லட்டு மாதிரி இருக்க உன்னை எவனாவது லவ் பண்ணி ஏமாத்திட்டுப்போயிடுவான். அதுல அப்செட் ஆகி நீ பாறையிலருந்து குதிச்சயின்னா, உன் பாடிய ஃப்ரியா தூக்கிட்டு வந்து உங்க அப்பா அம்மா கிட்ட ஒப்படைக்கிறேன்’’
என்று டயலாக்கெல்லாம் விடும் கிருஷ்ணா, ‘ அட ராமா ‘என்ற படி ஒரு கட்டத்தில் பிந்துவுக்கு நெருக்கமான ஜந்து ஆகிவிடுகிறார்.

தாடியைச்சொறிவது, வேஷ்டியைத்தொடை தெரியக் கட்டுவது ஆகிய இரண்டு வேலைகளை மட்டுமே படத்தில் செய்து வந்த வில்லன் ஜெயப்பிரகாஷின் கோரிக்கை ஒன்றை கிருஷ்ணா நிராகரித்து விட, கதைப்படி எப்படியும் கிருஷ்ணா க்ளைமேக்ஸில் பாறையிலிருந்துதான் குதிப்பார் என்று புரிந்துகொள்ளாமல், தனது அடியாட்களை வைத்து கிருஷ்ணாவையும் அவனது நண்பர்களையும் கொல்ல உத்தரவிடுகிறார்.

நண்பர்கள் மூவரும் கொல்லப்பட்டுவிட, கிருஷ்ணா மட்டும் பாறையிலிருந்து தனது பாடியுடன், தனது காதலி பாடியையும் கட்டிக்கொண்டு குதிக்கிறார்.கிருஷ்ணா ஏன் குதித்தார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தால், நீங்களும் ஏதாவது ஒரு தியேட்டரில் குதியுங்கள்.

சத்யசிவா என்ற புதிய இயக்குனர் இப்படி ஒரு தற்கொலைக்கதையுடன், கோடம்பாக்கத்தில் குதித்திருக்கிறார்.

கதை நடக்கிற களமும், இந்த பாத்திரங்களும் புதுசே ஒழிய, அவர்களுக்கு நடக்கிற எதுவும் நம்மை எதுவும் செய்யவில்லை.

ஹீரோ கிருஷ்ணாவும், அவரது நண்பர்களும், பாடியைத்தூக்குவதை சாக்காக சொல்லி படம் முழுக்க பீடி குடிக்கிறார்கள்.இதை ஒட்டி போடப்படும்’ புகை குடிப்பது புற்று நோயை உண்டாக்கும்’ என்ற குறிப்பு படத்தில் மொத்தம் 8234 முறை வந்து எரிச்சலூட்டுகிறது.சென்சார் வரவர பெரும் இம்சையார்.

கிருஷ்ணாவுக்கு இது மூனாவது படமாம். அண்ணன் விஷ்ணுவர்த்தன் சம்பாதிக்கிற காசை சினிமாவில் செலவழிக்கிற இந்த தம்பி தங்கத்தும்பி.நீங்க இன்னும் ஒரு முன்னூறு படமாவது நடிக்கனும் கிருஷ்ணமவராசா.

இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில், ஒரு சிலரால், சின்ன சிலுக்கு’ என்று அழைத்து மகிழப்பட்ட,நாயகி பிந்து மாதவி, படம் முழுக்க மூக்குசிந்துமாதவியாக அழுதுகொண்டே இருப்பதால், அவர் சின்ன சிலுக்கா,அல்லது அந்தப்பெயரில் ஒரு இழுக்கா என்று முடிவு செய்யமுடியவில்லை.

இசை யுவன் ஷங்கர் ராஜா. 'ஆத்தாடி மனசுதான்’ பாடலில் மட்டும் லேசாக காத்தாடி பறக்க விடுகிறார். ரீரெகார்டிங் டொட்டடொய்ங் ‘தான்.நா.முத்துக்குமார் இப்போதெல்லாம் லிரிக் என்ற பெயரில் சும்மா கிறுக்’ கித்தள்ளுகிறார்.

படத்தின் தயாரிப்பாளர் பட்டியல் சேகர்  ஹீரோவின் தந்தையே என்பதால், அவர் கொடைக்கானல் மலை உச்சிக்குப்போகும் கொடூரமான முடிவையெல்லாம் எடுக்க வேண்டியதில்லை.
இந்த மாதிரி டைரக்டர்களின் சகவாசத்தை மலை அடிவாரத்தோடு நிறுத்திக்கொண்டால் போதும்.

மொத்தத்தில் கழுகு’ .இந்த மாதிரி டைரக்டர்கிட்ட பாத்துப் பழகு. இல்லைன்னா மலையிலருந்து நம்மள தற்கொலை பண்ண வச்சிருவாங்க.

12 comments:

  1. சமிபத்தில் வெளியாகி தலைதெறிக்க ஓடிய பல படங்களுக்கு மத்தியில் கழுகு எவ்வளவோமேல் நான் பார்த்த வரையில் ஆங்காங்கே தென்படும் சில குறைகளை தவிர்த்துப்பார்த்தால் கழுகு ஒரு வெற்றி படமே..!
    டி.அருள்செழியன்

    ReplyDelete
    Replies
    1. உங்க நம்பிக்கை வீண் போகாம இருக்க அந்த ஜூனியர் விகடன் கழுகாரை வேண்டிக்கிறேன்.

      Delete
  2. ஓஹோ....அவுத்துப்போட்டு ஆடுற சிலுக்கை விட, அழுகிரவ உங்களுக்கு இழுக்கா தெரியுராளா? அசிங்கபுடிச்ச்சவங்கடா...

    ReplyDelete
  3. nanga enra mokka padathin vimarsanam ennachu boss

    ReplyDelete
    Replies
    1. அட காமெடி பண்ணாம ‘போங்க’ பாஸ்.

      Delete
  4. என்னாங்க கழுகு உயர பறக்கும்ன்னு நினச்சா, அது கழுகு இல்ல குருவின்னு சொல்லிடேங்க.
    கொடைக்கானல தற்கொலை பண்ணிகிறவங்களை, பாடிகளைத் தேடி எடுத்து வருவர்களை பத்தி விஜய் டிவி "குற்றம் நடந்தது என்ன" நிகழ்ச்சியில் பார்த்து இருக்கேன். இந்த படத்துக்குகாண கதை களம், அத பத்தியது என்பதால், ஆஹா.. ரொம்ப புதுசா இருக்கேன்னு நினச்சேன். ஆனா களம் மட்டும் தான் புதுசு, கதை பழசுன்னு நீங்க பிரிச்சு மேஞ்சிடேங்க.

    ReplyDelete
    Replies
    1. டைரக்டரு தான் பிரிச்சி மேய்ஞ்சிட்டாரு. நாம மேயப்பட்டிருக்கோம்.

      Delete
  5. // //ஹீரோ கிருஷ்ணாவும், அவரது நண்பர்களும், பாடியைத்தூக்குவதை சாக்காக சொல்லி படம் முழுக்க பீடி குடிக்கிறார்கள்.இதை ஒட்டி போடப்படும்’ புகை குடிப்பது புற்று நோயை உண்டாக்கும்’ என்ற குறிப்பு படத்தில் மொத்தம் 8234 முறை வந்து எரிச்சலூட்டுகிறது.சென்சார் வரவர பெரும் இம்சையார்.// //

    எனக்கு உதவிய தங்களுக்கு நன்றி

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சரகம் கடந்த ஆண்டு நவம்பர் 14 முதல் - புகைபிடிக்கும் காட்சி வரும்போதெல்லாம் எச்சரிக்கை விளம்பரம் போட வேண்டும் என உத்தரவிட்டும், தணிக்கைத் துறை அதனை செயல்படுத்த மறுத்தது.

    நான் "மயக்கம் என்ன" மற்றும் "மவுனகுரு" படத்தின் மீது புகார் அளித்தும், தணிக்கைத் துறையிடம் தகவல் அறியும் உரிமையின் கீழ் விளக்கம் கேட்டும் போராடிய பின்னர் - இன்றுதான் "மார்ச் 8 முதல் செயல்படுதி வருகிறோம்" என எனக்கு பதில் அளித்தார்கள்.

    இதனை உறுதிப்படுத்துவதற்காக "கழுகு" மொக்கைப்படத்தை எப்படி பார்ப்பது? என தவித்தேன். நல்லவேளையாக, உறுதிபடுத்திய உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. அதுக்காக இத்தனை தடவ கார்டு போட்டா எழுந்திரிச்சி பீடி குடிக்க போயிட மாட்டாங்களா?

    ReplyDelete
  7. பாடியை மீட்டுத்தரும் கிருஷ்ணாவிடம் தனது உயிரோடு உள்ள பாடியை காதல் என்ற பெயரில் ஒப்படைக்கிறார் பிந்து. - Sema nakkal....

    ReplyDelete
  8. அது நக்கல் இல்ல. கதையில டைரக்டரு உண்டாக்குன சிக்கல்.

    ReplyDelete